Ragavendra Alumni 2010

மாணவனே.... வெற்றி மீது பற்று வை..

சொல்லுந்திறனை வளர்த்தல்

கேட்பவருக்குப் புரியும் படியாக உரக்கப் பேசு; கண்களைப் பார்த்துப் பேசு; புன்னகை மெல்ல தவழும் முகப் பொலிவோடு பேசு. பேசுவதற்கும் எழுதுவதற்கும் அடிப்படைத் தேவை மொழி அறிவு. தமிழோ அல்லது ஆங்கிலமோ – அதில் உள்ள அடிப்படை இலக்கணத்தை முதலில் படித்துத் தேர்ச்சி கொள்.
உனக்கு நன்கு அறிமுகமான பேச்சாளரைப் போல பேச வேண்டும் என ஆர்வம் காட்டு. நீ விரும்பும் எழுத்தாளரைப் போல எழுத வேண்டும் என ஆசைப்படு.
கண்ணில் படும் ஓர் ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான பொருளை அறிக. அதன் பொருளுக்கு இணையான மற்ற சொற்களை அறிக. அதன் பொருளுக்கு எதிர்மறைப் பொருளைத்தரும் எதிர்ச்சொற்களை அறிக. அதற்குரிய சரியான உச்சரிப்பை அறிக. அனைத்தையும் அறிந்த பின், அவற்றை உனக்குச் சொந்தமாக்கு. நினைவு வயலில் பதியம் போடு.                                                                                                                                                      தரமான ஆங்கில அகராதி ஒன்றைச் சொந்தமாக வாங்கு. சொல்லுக்குரிய எழுத்துகள், வேர்ச்சொல், பல்வேறு பொருள்கள், இணைச் சொற்கள், உச்சரிப்பு முதலியவற்றை அந்த அகராதி மூலம் அறிக.
      ஓர் ஆங்கில வாக்கியத்தின் கூறுகள் அனைத்தையும் அக்கு வேறு ஆணி வேறு எனப் பகுத்தும் தொகுத்தும் அறிக. எளிய நடையில் தெளிவாக எழுதிப் பழகுக.
கடினமாக எழுதுவது எளிமையானது. ஆனால் எளிமையாக எழுதுவது மிகவும் கடினமானது என்பது ஒரு பழமொழி. எளிய நடையில் எழுதுவதற்கு மிகுந்த பயிற்சி அவசியம்.
      நீ இப்போது மேல்நிலை வகுப்பிலோ, கல்லூரியிலோ படிக்கலாம். மழலை வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான ஆங்கில மொழிக்கான பாடநூல்களை வாங்கிப்படி. உனக்கு எளிதாகப் புரியும். இலக்கணம் வசப்படும். சொற்களஞ்சியம் பெருகும். பிறகு உன்னால் முறையாகப் பேசவும் எழுதவும் முடியும்.
உனக்கு ஓர் இரகசியம் சொல்லட்டுமா? மேற்சொன்ன முறையில் படித்துதான் நான் ஆங்கில மொழியறிவை வளர்த்துக் கொண்டு இன்று அம்மொழியில் பேசுகிறேன். பல நூல்களை எழுதுகிறேன்.
மேடையில் பேச சிறுசிறு வாய்ப்புக் கிடைத்தாலும் நழுவ விடாதே. பேசப் பேச பேச்சிலும், எழுத எழுத எழுத்திலும் மெருகேறும். நீ பேசியதைப் பதிவு செய்து மீண்டும் கேள். செய்த தவறுகளை அடுத்த சொற்பொழிவில் தவிர்த்து விடு. தொடர்ந்து முயற்சியும் பயிற்சியும் செய்தால் நீ முதல்தர பேச்சாளராய் ஆவது உறுதி.
பேச்சோ, எழுத்தோ – அதற்கு ஓர் அடிப்படை அரிச்சுவடி உண்டு.                                          1. சரியாக இருத்தல் (Accuracy)
2. சுருக்கமாக இருத்தல் (Brevity)
3. தெளிவாக இருத்தல் (Clarity)                                                                          நீ பங்கேற்கும் நேர்காணலில் கூட, நீ கூறும் விடைகள், உரையாடலில் உன் பங்கு ஆகியவை இரத்தினச் சுருக்கமாய் இருத்தல்நன்று. நேர்காணல் குழுவின் தலைவருக்கும், அங்கத்தினர்களுக்கும் இன்னும் சில வினா கேட்கலாம் என்று எண்ணும் வகையில் நீ இயல்பாகவும் இனிமையாகவும் பேச வேண்டும். சுற்றி வளைத்து வளவள என்று நேர்காணலில் பேசக்கூடாது.நேர்காணலில் நீ கடைபிடிக்க வேண்டிய மூன்று முக்கியக் கோட்பாடுகள் இதோ,
1. நிமிர்ந்து உட்கார் (Sit Up)
2. தெளிவாகப் பேசு (Speak Up)
3. சுருங்கச் சொல்லி முடி (Shut Up)

மேலும் சில குறிப்புகளைத் தருகிறேன். இவை நேர்காணலைச் சந்திக்கும் போது உனக்குக் கை கொடுக்கும்.
இரைந்து பேசாதே
யாரையும் அவமதித்துப் பேசாதே
உணர்ச்சி வசப்பட்டுப் பேசாதே
உன் அங்க அசைவுகள் (Body Language) ஒவ்வொன்றும் உன் மதிப்பை உயர்த்த வேண்டும். (உரையாடலின் போது மூக்கைத் தடவுதல், மீசையைத் தொடுதல், கணைத்தல், சொடக்குப் போடுதல் முதலியன உன் மதிப்பைக் கெடுக்கும்)
உரையாடலில் பெயரைக் குறிப்பிட நேர்ந்தால் பெயரை முழுமையாக, முறையாகச் சொல்.

நீ பள்ளியில் இறுதி வகுப்பு படித்த போது யார் தலைமையாசிரியர் என்று கேட்டால், முழுப் பெயரை, முன் மதிப்பு ஒட்டுடன் சேர்த்துச் சொல். எடுத்துக் காட்டாக, டாக்டர். அ. கோவிந்தராஜூ என்று சொல்ல வேண்டும்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பெயரை குறிப்பிட்டால், கலாம் சார் என்று சொல்லாதே. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்று சொல்.
உண்மையைப் பேசு; உண்மையை மட்டுமே பேசு.
நா தவறி ஏதேனும் சொல்ல நேர்ந்தால் மன்னிப்புக் கேள்.
விடை சொல்வதில் அவசரம் வேண்டாம்.
பேசுவதை விட காது கொடுத்துக் கேட்டல் முக்கியம்.
நேர்காணல் முடிந்ததும் எழுந்து நின்று நன்றி சொல்லி விட்டு, நிமிர்ந்து நட (கூனிக் குறுகி, வளைந்து நெளிந்து நன்றி சொல்லக் கூடாது).
மேலும் பல பயனுள்ள தகவல்களை என்னுடைய Principles of Success in Interview என்னும் ஆங்கில நூலை படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
தொடரும்…
முனைவர் சி. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். அவர்களின் “Be Ambitious Boys and Girls” ஆங்கில நூலிலிருந்து தமிழாக்கம் திரு. கோவிந்தராஜ்.

Share:

Like: